🦉தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது அடுக்கடுக்கான ஊழல் மற்றும் நிர்வாக முறைகேடு புகார்களைச் சுமத்தி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கடுமையான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "ஊழலை ஒழிப்போம் என்று கொக்கரித்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தூய சக்தி அரசியல் இதுதானா?" என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், பொதுவெளியில் போதைப்பொருள் பயன்படுத்தியது போல வீடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளான 'ஒயிட் பவுடர்' புகழ் அமைச்சர் மீது இதுவரை எவ்வித விசாரணையும் நடத்தாதது ஏன் என்றும், சட்டமன்றத்தையே சூட்டிங் ஸ்பாட் ஆக்கி சினிமா வசனம் பேசிய முதலமைச்சர் இதில் மௌனம் காப்பது ஏன் என்றும் சாடியுள்ளார்.
மேலும், கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவம் தொடர்பாகச் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசி விசாரணையைத் திசைதிருப்ப முயலும் மற்றொரு அமைச்சரின் அரைவேக்காட்டுத் தனத்தை முதலமைச்சர் கண்டும் காணாமல் இருப்பதன் மர்மம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாணியம்பாடியில் ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி வழங்கப்பட்டதாக வந்த புகாரையும், அரசு வழக்கறிஞர்களை நியமிக்கச் சொந்தக் கட்சி நிர்வாகிகளிடமே மூத்த அமைச்சர் ஒருவர் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளையும் சுட்டிக்காட்டியுள்ள தினகரன், குற்றவாளிகளைப் பாதுகாக்கவே தவெக அரசு முனைகிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும், இந்த வழக்கறிஞர் நியமன ஊழலே தவெக ஆட்சியின் உண்மையான முகத்தைக் காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.
ஆகவே, இந்த வழக்கறிஞர் நியமனக் குளறுபடிகளைக் களைந்து தகுதியானவர்களை வெளிப்படையாக நியமிக்க வேண்டும் என்றும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
@TTVDhinakaran
#ஆந்தைரிப்போர்ட்டர் #டிடிவிதினகரன் #முதலமைச்சர்விஜய் #தவெகஅரசு #அரசியல்சர்ச்சை #வழக்கறிஞர்நியமனம் #AanthaiReporter #TTVDhinakaran #CMVijay #TVKGovernment #PoliticsTamilNadu #CorruptionAllegations
28










